"கண்களின் ஒளி", கவிதைகள், உடல், மொழி, நினைவு, ஒளி ஆகியவை ஒன்றில் ஒன்றாய் உருமாறிக்கொண்டே இருக்கும் தீவிரமான அகப்பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன. காதல் என்னும் அரிய மூலிகையின் வழியே ஆசை, வலி, உணர்வு, இருப்பு ஆகியவற்றின் அர்த்தங்களையும் ஆராய்கின்றன. காதலே பெருநெறி. கண்களே மீண்டும் மீண்டும் மைய உருவகமாகத் தோன்றுகின்றன-பார்வை, அறிவு, எரிதல், உருவாக்கம் ஆகியவற்றின் தளமாக.
கண்களின் ஒளியால் பற்றியெரியும் உடலும் உயிரும் உரு பெருங்கருணையின் சுடரேற்றுகின்றன. உள்ளொளியால் ஒளிர்கிறது நெஞ்சம். மெய்யெலாம் அய்யகோ மறைத்தேன் எனும்படியான காதல். பெண் உடல் செயலற்றதன்று; அது மொழியையும் வரலாற்றையும் எதிர்ப்பையும் உருவாக்குகிறது. காலம் இங்கு திரவமாய் மாறி, நினைவு, முதுமை, பருவங்கள் அனைத்தையும் வாழ்ந்த உணர்வாக மடக்குகிறது. இக்கவிதைகளின் உருவகங்கள் மென்மைக்கும் வன்முறைக்கும், அந்தரங்கத்திற்கும் பிரபஞ்ச விரிவிற்கும் இடையே பிளவில்லாமல் நகர்கின்றன. நேர்கோடான அர்த்தங்களை இக்கவிதைகள் மறுக்கின்றன; மெதுவான, கவனமான வாசிப்பைக் கோருகின்றன.
தமிழின் உணர்வுச் செறிவும் உணர்வுதுடிப்பும் ஆங்கிலத்திலும் வலுவாக நிலைத்திருக்கின்றன. இங்குள்ள பெண்ணியச் சிந்தனை அறிவிப்பாக அல்லாமல் அனுபவமாகவே வெளிப்படுகிறது. கண்களின் ஒளி, இருப்பை நோக்கிய அச்சமற்ற தியானமாக நின்றெரிகிறது.