உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது.
பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்.
இந்நாளில் பெண்ணுலகில் பலதிறக் குறைபாடுகள் தோன்றியுள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பாகக் குறிக்கத் தக்கன. ஒன்று, சிறிதும் நாகரிகமின்றிச் சில இடங்களில் பெண் இருளில் மூழ்கிக்கிடப்பது; மற்றொன்று, பழுத்த நாகரிகம் என்னும் பேய்க்குச் சில இடங்களில் பெண் இரையாகி வாழ்வையே குலைத்துக் கொள்வது. இருசாராரும் ஒழுங்குபட்டுப் பெண்மை யுடையராய் உலகிற்குப் பயன்படல் வேண்டும்.
நமது நாட்டில் இடைக்காலத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் பெண்ணுலகின் பெருமைக்கே கேடு சூழ்ந்தன. அக்கட்டுப்பாடுகள் பெண்ணினத்தைக் கல்லாய் மண்ணாய் நடைப் பிணமாய்ச் செய்துவிட்டன. மேல்நாட்டில் இத்தகைய கொடுங் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் ஆண்டுப் பழுத்த நாகரிகம் என்னும் அலகை, பெண்மையின் இறைமையைக் கவர்ந்து நிற்கிறது. அந்நாட்டுப் பெண்ணறிஞர் பலர் தாய்மைப் பேற்றை இழிவெனக் கருதி வாழ்தல் கண்கூடு. தாய்மை நிலவாத இடத்தில் இறைமை எங்ஙனம் நிலவும்? மேல்நாட்டுப் பழுத்த நாகரிகம் உலகை வளர்க்குமா? தேய்க்குமா?
இக்காலத்தில் பெண்மைக்கணுள்ள தாய்மையையும், தாய்மைக்கணுள்ள இறைமையையும் மக்கள் தங்கள் வாழ்வில் உணரத்தக்க துறைகள் காணப்பெறல் நல்லது. அதற்குரிய முயற்சி விரைந்தெழுவதாக.