'சன்மார்க்க போதம்' என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல்.
பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை. இத்தகையர் பொருட்டு இந்நூல் இயற்றப் பட்டது.
'சன்மார்க்க போத'த்திலுள்ள பொதுமைகளைச் சிறப்பு முறையால் இந்நூல் திறந்துகாட்டும். இதனால் இந்நூலுக்குச் 'சன்மார்க்கத் திறவு' என்னுந் தலைப்புச் சூட்டப்பட்டது. (முதற் பதிப்பிலிருந்த தலைப்பிலே 'சமரசம்' என்பது, இரண்டாம் பதிப்பில் சுருக்கத்தின் பொருட்டு நீக்கப்பட்டது.)
இரண்டு நூலிலும் இடம் பெற்றிருப்பவர் குருமார். குருமார் முன்னூலில் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறார். அவர்தம் போதனைகள், பெயர்கள் முதலியன இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. இவ்விளக்கம் சன்மார்க்க சங்கத்தார்க்குப் பெருந்துணை செய்வதாகும்.
முன்னூலாகிய 'சன்மார்க்க போத'த்தைப் படித்த பின்னர் நேயர்கள் இந்நூலைப் படிப்பார்களாக.
'சன்மார்க்க போதம்' என்னும் ஒரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அது, பொது நூல். அந்நூலில், சத் (உண்மை) இறை என்பதும், மார்க்கம் (வழி) இயற்கை என்பதும், சத்தை அடைதற்கு இயற்கை வழிபாடு தேவை என்பதும், இயற்கை வழிபாடு குருநாதன் காட்சியை வழங்கும் என்பதும், குருநாதன் காட்சியால் நுட்பம் விளங்கும் என்பதும், மிகச் சிலர் குருவருளின்றியும் இயற்கை வழி பாட்டளவிலேயே நுட்பம் விளங்கப்பெறுவர் என்பதும், இயற்கை கடந்த தனித்த இறைநிலை வாக்கு மனம் கடந்தது என்பதும், இன்ன பிறவும் விரித்துக் கூறப்பட்டன.