வஸந்தின் 'சத்தம் போடாதே' திரைப்படம் தமிழில் வந்த 'சிவப்பு ரோஜாக்கள்.' 'மூடுபனி' வரிசையில் வைத்துப் பார்க்கவேண்டிய கிளாஸிகல் சைக்கோபாத் படம் என்பதில் சந்தேகம் இல்லை.
சைக்கோபாத்தாக வரும் கதாபாத்திரத்தை வஸந்த் வெகு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். பிளவுண்ட ஆளுமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாத்திரத்தின் செயல்கள் வெகு நேர்த்தியானவை. மிகவும் தந்திரமாக புத்திக்கூர்மையுடன் தங்கள் நோக்கங்களை நோக்கி நகரும் இத்தகைய இயல்புகொண்டவர்கள் எந்த விதத்திலும் சந்தேகிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். படம் முழுக்க இந்தக் கதாபாத்திரம் அவ்வளவு துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மனைவியாக வரும் கதாபாத்திரமும் வஸந்த் உருவாக்கிய மறக்க முடியாத பெண் பாத்திரங்களில் ஒன்று. ஆண்மைக்குறைபாடு காரணமாக விவாகரத்துக்கோரும் பெண்களின் எண்ணிக்கை குடும்பநல நீதிமன்றங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால் ஒரு தமிழ் சினிமாவில் இத்தகைய காரணங்களுக்காக ஒரு பெண் ஒரு ஆணை விவாகரத்து செய்வது அத்தனை எளிதல்ல. தமிழ் சினிமாவின் செண்டிமென்ட் அத்தனை கடினமானது. ஆனால் வஸந்த் இதை வெற்றிகரமாக கடந்து செல்கிறார். அவர் காட்டும் பெண் இந்த யுகத்தைச் சேர்ந்தவள். அவள் வேறொரு வாழ்க்கையை நோக்கி வெகு இயல்பாகக் கடந்து செல்கிறாள். அவளுக்கு அதில் சங்கடங்கள் ஏதுமில்லை. தமிழ் சினிமாவின் பெண் பிம்பத்தைக் கலைக்கும் தருணம் இந்தப் பாத்திரம்.
- மனுஷ்ய புத்திரன்