26 டிசம்பர் 2004. ஞாயிற்றுக்கிழமை.
அதுவரை இன்னதென்று அறிந்திராத அந்தப் புதிய பேரழிவு தெற்காசிய நாடுகளைத் தாக்கியது. மாலை நாளிதழ்கள் அதன் பெயரை எப்படி எழுதுவது என்று கூட தெரியாமல் திணறின. முதல்நாள் அதனை திசுனாமி என்றும், பின்னர் சுனாமி என்றும், அடுத்தடுத்த தினங்களில் தமிழறிஞர்களின் தயவால் ஆழிப்பேரலை என்றும், அப்புறம் எதற்கு வம்பு என்று சுனாமி என்று பொது மொழியிலேயே எழுதத்துவங்கின. அப்பேரலை சில கிழக்கு ஆஃபிரிக்க நாடுகளையும் சேர்த்து மொத்தம் பதினான்கு நாடுகளை பாதித்தது. அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கை மட்டும் இரண்டரை லட்சத்திற்கு மேல். அதில் பாதி இந்தோனேசிய மக்கள். இந்தியாவில் மட்டும் பதினைந்தாயிரம் மக்களுக்கு மேல் இறந்திருக்கலாம். இலங்கைத் தீவு இந்தியாவிற்கு ஒரு கேடயம் போல அமைந்ததை எண்ணி மகிழ முடியாதபடி அங்கேயும் ஏராளமான இழப்பு.
சுனாமி தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அச்சுனாமிக்கு பின்னான இருபத்தி நான்கு நாட்களில், சுனாமியினால் அல்லாமல் வேறு சில காரணங்களால் இன்னொரு நான்கு பேரின் வாழ்க்கையும் புரட்டிப் போடப்பட்டது - அன்பு, மணி, கிருபா, ஜேம்ஸ். அவர்கள் நான்கு பேரையும் இணைத்த புள்ளி - சென்னை மத்திய சிறைச்சாலை.